திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மத்திய சிறையில் சூரிய ஓளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. கேரள மாநில மின்சார துறை அமைச்சர் அரயாடன் முஹம்மது இதை துவக்கி வைத்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் புஜாப்பராவில் உள்ள மத்திய சிறையில் 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் தான் நாட்டிலேயே முதன் முறையாக கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. 4 சப்பாத்தி, சிக்கன் குழம்பு ரூ.30க்கு விற்கப்பட்டு வருகிறது. இது தவிர இங்கு இட்லி, சாம்பாரும் விற்கப்பட்டு வருகிறது.
குறைந்த விலைக்கு தரமான உணவு கிடைப்பதால் திருவனந்தபுரம் நகரில் மக்களிடையே கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, சிக்கன் குழம்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததது. முதலில் சிறைக்கு வெளியே தனி கவுன்டர் வைத்து சப்பாத்தி, சிக்கன் குழம்பு விற்கப்பட்டது. தற்போது நடமாடும் விற்பனை மையமும் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை துவக்கி வைத்த கேரள மின்சார துறை அமைச்சர் அரயாடன் முஹம்மது கூறியதாவது,
கேரள மாநிலத்தில் வரும் 2020ம் ஆண்டிற்குள் மின்சார தேவை 6 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய மின்சார உற்பத்தி திட்டங்கள் குறைவாக உள்ளன. எனவே எதிர்காலத்தில் கேரள இருண்டுவிடும் நிலை ஏற்படலாம்.
இந்நிலையை தவிர்க்க வீடுகளின் கூரைகளில் சோலார் தகடுகள் வைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கேரளாவில் அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம். இதன் முதல் கட்டமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளில் சோலார் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன்மூலம் ஆண்டிற்கு சுமார் 10 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில், மாநிலத்தில் உள்ள மற்ற வீடுகளுக்கும், இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றார்.
ரூ.7.9 கோடி செலவில் புஜாப்பரா மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம், 229 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதில் சிறையில் உள்ள விளக்குகள், பேன்கள், சாப்பாத்தி செய்யும் சமையலறை, தண்ணீர் பம்புசெட் ஆகியவற்றை இயக்க முடியும்.