டெல்லி: காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளிலும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று மாலை அனுமதி அளித்தது. ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கும் திமுக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. அதில், பென்ஷன் துறையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்தும், காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டின் அளவை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரித்தும் முடிவெடுக்கப்பட்டது.
பென்ஷன் துறையில் இதுவரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ்தான் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது அந்த கட்சி அரசிலிருந்து விலகிவிட்டது. இதனால் மத்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தயக்கமின்றி மேற்கொண்டு வருகிறது.
காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி தருவதை திமுக எதிர்த்து வருகிறது. இதைக் காட்டும் வகையில் அந்தக் கட்சியின் கேபினட் அமைச்சரான அழகிரி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை இன்று ஏறுமுகத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சில்லறை முதலீட்டில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசு அதிரடியாக அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ஆனால், இதையெல்லாம் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் போய்விட்ட நிலையில் மாயாவதி, முலாயம் சிங்கின் ஆதரவோடு காலத்தைத் தள்ளி வரும் மத்திய அரசு இதை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications