தமிழகத்திற்குத் தண்ணீற் திறந்து விடுவதை எதிர்த்து மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன்னட அமைப்பினர், கட்சியினர் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி போக்குவரத்து முழுவதும் முடங்கியது.
ஈரோடு மாவட்டத்தை ஒட்டிய புளிஞ்சூர் செக்போஸ்ட் வரை மட்டுமே கர்நாடக பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு பஸ்கள் கடந்த 29ம் தேதி முதல் கர்நாடகாவுக்கு செல்லவில்லை. எல்லைகளில் இறங்கி, செக்போஸ்ட் வழியாக நடந்து சென்று, அந்தந்த மாநில பஸ்களில் ஏறி செல்கின்றனர்.
கர்நாடகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று பந்த் நடந்தது. அதன்பிறகு நிலைமை சீராகி, இன்று முதல் இரு மாநில போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் போக்குவரத்து துவங்கவில்லை. தமிழக பதிவெண் கொண்ட எந்த லாரிகளும் கர்நாடகாவுக்கு செல்லவில்லை. 9வது நாளாக இன்று லாரி போக்குவரத்து முடங்கியது.
இதனால் தமிழகத்தில் இருந்து சரக்குகள் ஏற்றிய லாரிகள் கர்நாடகாவுக்கோ, வடமாநிலங்களுக்கோ செல்ல முடியாமல் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், ஒசூரிலிலிருந்து தமிழகம், கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து இன்று காலை தொடங்கியது.