சில்லறை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் வால்மார்ட், இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமான செடார் சப்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் (இது பார்தி நிறுவனத்துக்கு சொந்தமானது) 2010ஆம் ஆண்டு ரூ.430 கோடி முதலீடு செய்தது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான விதிமுறைகளை மீறி, இம்முதலீடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து தற்போது இது தொடர்பாக விசாரித்து வழக்குப்பதிவு செய்ய பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் வால்மார்ட்டின் முதலீட்டில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.