சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று காலையில் தொடங்கியிருக்கிறது. பிற்பகலும் தேர்வு நடைபெற உள்ளது.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் பள்ளிக்கூடங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் இந்த தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண் அதாவது 90 மார்க் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள்.
தமிழகத்தில் முதல் முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை மாதம் 12-ந்தேதி நடத்தப்பட்டது. ஆனால் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரம் பேரில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வுக்கு நேரம் போதாது என்பதுதான் அனைத்து ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதைத்தொடர்ந்து, தேர்வு நேரத்தை 11/2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்தியதுடன் தோல்வி அடைந்தவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க அரசு முன்வந்தது. தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் 14-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தகுதித்தேர்வுக்கு முன்பு விண்ணப்பிக்காதவர்கள் மறுதேர்வில் கலந்துகொள்ளும் வகையில் தங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன்மூலம் புதிதாக 17 ஆயிரம் பேர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
சென்னையில் 85 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் ஏறத்தாழ 6.75 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.