சென்னை துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த குடும்பத்தினருக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் பேசியதாவது:
சென்னை துறைமுகம் பழமையானது, பாரம்பரியமிக்கது. 130 ஆண்டு கால வரலாறு கொண்டது. சென்னை துறைமுகத்தின் சிறப்பான செயல்பாட்டால், தமிழகம் மட்டுமல்ல இந்திய தேசமே வணிக ரீதியாக, பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. துறைமுகத்தில் பணி வேண்டி பதிவு செய்த 951 வாரிசுதாரர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், இதுபோன்று பணி வழங்குவது 1991-ம் ஆண்டுக்கு பிறகு 5 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், நடைமுறை சிக்கல் உள்ளது.
எண்ணூர் துறைமுகம் விரிவாக்கம் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு பணிகள் முடியும். எண்ணூர்-மணலி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனமாக்கப்பட உள்ளது. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
சென்னை துறைமுகத்தின் சரக்குகளை கையாள 123 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் உலர் துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வு நிலையில் உள்ளது. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை-எண்ணூர் துறைமுகங்களுக்கு இடையே ரூ.119 கோடி செலவில் சிறு கப்பல் போக்குவரத்து திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார் அவர்..