டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊஉழல் வழக்கில் பிரதமரையும், நிதி அமைச்சரையும் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றலாம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுமே பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சாட்சிகளாக்கி விசாரணைக்கு அழைக்க வலியுறுத்தி வருகின்றனர். அரசுக்கு ஆதரவு தரும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் கூட இக்கோரிக்கையை ஆதரிக்கின்றன. ஆனால் சாக்கோ இதனை நிராகரித்துவிட்டார்.
இது தொடர்பாக சாக்கோவுக்கு பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா நேற்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த விவகாரத்தில் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று ஜே.பி.சி. சிறப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இவ்வழக்கில் பிரதமரையும், நிதி அமைச்சரையும் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றலாம். இதன்மூலம் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார். மேலும் இதே விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் முன் ஆஜராக பிரதமர் ஏற்கெனவே முன்வந்தார். எனவே ஜே.பி.சி. முன் ஆஜராவதற்கு அவருக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று தமது கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications