
இனி காலை 6 மணிக்கு பெட்ரோல் பங்குகளை திறக்க மாட்டோம் என்றும், மாலை 6 மணிக்கு மேல் திறந்து வைத்திருக்கவும் மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
அதாவது, இனிமேல் ஒரே ஒரு ஷிப்ட் மட்டுமே திறந்து வைத்திருப்பார்களாம்.
காரணம், இவர்களுக்கு தரப்படும் கமிஷன் போதவில்லையாம். பெட்ரோல் ஆவியாவது, ஊழியர்களது சம்பளம், மின் கட்டண உயர்வு காரணமாக செலவு கட்டுப்படி ஆகவில்லையாம். இதனால், ஒரே ஒரு ஷிப்ட் மட்டுமே பெட்ரோல் பங்குகளை திறந்து வைத்திருக்கப் போகிறார்களாம். இதன்மூலம் செலவு குறைந்து தங்களால் லாபம் ஈட்ட முடியும் என்றும், அதிக நேரம் திறந்து வைத்திருப்பதால் நஷ்டமே ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதற்கு ஒரே தீர்வாக இவர்கள் சொல்வது, பெட்ரோல், டீசல், கேஸ் விற்பனைக்கு இவர்களுக்குத் தரப்படும் கமிஷனை அதிகரிக்க வேண்டுமாம். இல்லாவிட்டால், பெங்களூர் நகர்ப்புறத்தில் காலை 9 மணிக்கே பெட்ரோல் பங்கை திறப்பார்களாம், மாலை 6 மணிக்கு மூடிவிடுவார்களாம்.
நெடுஞ்சாலைகளில் உள்ள பங்குகள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுமாம். பகலில் இவை செயல்படாதாம்.
இவர்களது லைசென்ஸையே ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, வேலையில்லா பட்டதாரிகள், நாட்டுக்கு உழைத்த முன்னாள் ராணுவ வீரர்களிடம் பெட்ரோல் பங்குகளை ஒப்படைத்துவிடலாம்.
நஷ்டம் ஏற்படுகிறது என்றால், ஏன் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் லஞ்சம் தந்தும் இவர்கள் பெட்ரோல் பங்குகளை திறக்கின்றனர்?. நாட்டில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை என்பது நினைவுகூறத்தக்கது.
இன்று காலை முதல் இந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் போராட்டம் அமலுக்கு வந்துவிட்டாலும் பெங்களூர் பெட்ரோல் பங்குகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. காரணம், மகாளய அமாவாசை.
இதனால் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. அமாவாசை என்பதால் பலர் வெளியேயும் வரமாட்டார்கள். இதன் காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் இன்று கூட்டம் இல்லை.
நாளை முதல் பெட்ரோல் பங்குகளில் பெரும் வரிசை நிற்கப் போகிறது..


Click it and Unblock the Notifications