சென்னை : சமையல் எரியவாயு சிலிண்டரில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு' மூலம் ரகசிய குறியீடு எண் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை இந்த நிதியாண்டு முடிவடையும் மார்ச் மாதத்திற்குள் சோதனை முறையில் செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜ் பால் கூறியதாவது :
6 சிலிண்டர்கள்
சிலிண்டர் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பார்-கோடிங், ஆர்எஃப்ஐடி கார்டு மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகிய 3 வெவ்வேறு முறைகளை சோதனை முறையில் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில், ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், இந்த முறையை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சோதனை முறையில் 3 முறைகளும் செயல்படுத்தப்படும். பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
ஸ்மார்ட் கார்டு முறை
பார்கோடிங் முறையின் கீழ், வாடிக்கையாளர்களின் கேஸ் இணைப்புப் புத்தகத்தின் மீது பார்கோடு எண் ஒட்டப்படும். ஏஜென்சி ஊழியர், சிலிண்டர் வழங்கும்போது அதற்கென உள்ள கருவியைக் கொண்டு வாடிக்கையாளரின் பார்கோடு எண்ணைப் பதிவு செய்து விடுவார். இதன்மூலம் எத்தனை சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்பதை கம்ப்யூட்டரிலேயே தெரிந்துகொள்ள முடியும். இதுபோல, ஆர்எஃப்ஐடி கார்டு முறையின் கீழ், வாடிக்கையாளருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். சிலிண்டரைப் பெறும் வாடிக்கையாளர் ஊழியர் கொண்டுவரும் கருவியில் அந்த கார்டை தேய்த்து ரகசிய குறியீட்டெண்ணை பதிவு செய்ய வேண்டும்.
முறைகேடுகள் தவிர்க்கப்படும்
தற்போது சிலிண்டர் விநியோகிக்கும்போது வாடிக்கையாளரிடம் உள்ள இணைப்பு புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. எத்தனை சிலிண்டர் வாங்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.
ஆனால் பலர் இந்த புத்தகத்தை தொலைத்து விடுகிறார்கள். ஒரே நபர் பல முகவரிகளிலோ அல்லது ஒரே முகவரியிலோ ஒன்றுக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்பு பெற்றுள்ளார். இதுபோன்ற முறைகேடுகள் புதிய முறைகளின் மூலம் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.