டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக நேற்று ஆஜரான முன்னாள் கேபினட் செயலர் சந்திரசேகர், உரிம கட்டணமாக ரூ35 ஆயிரம் கோடி நிர்ணயிக்க பரிந்துரைத்ததாக கூறியுள்ளார். தமது இப்பரிந்துரை ஏற்கப்பட்டிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்கிறாது என்ற பொருளில் சந்திரசேகர் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாட்டை உலுக்கிய ஸ்ப்கெட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக காங்கிரஸின் பி.சி.சாக்கோ தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இக்குழு முன்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்ப பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் கூட்டுக் குழுத் தலைவர் இதனை நிராகரித்து வருகிறார். இதனால் இக்கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தையும் பாஜக புறக்கணித்தது.
நேற்றைய கூட்டத்தில் ஆஜரான கேபினட் முன்னாள் செயலர் சந்திரசேகர் சாட்சியமளித்த, ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான உரிம கட்டணமாக ரூ36 ஆயிரம் கோடி நிர்ணயிக்க பரிந்துரைத்தேன்.ஆனால் தமது பரிந்துரையை கொல்லைப்புறமாக நிராகரித்துவிட்டது பிரதமர் அலுவலகம் என்று கூறியுள்ளார்.
இந்தப் பரிந்துரையை அரசு ஏற்றிருந்தால் நிச்சயமாக ஸ்ப்கெட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலைத் தடுத்திருக்க முடியும் என்ற பொருள்பட சந்திரசேகர் சாட்சியமளித்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.