திருவள்ளூர்: திருவள்ளூரில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக அளிக்க வைக்கப்பட்டிருந்த 20 லேப் டாப்கள் திருட்டு போனது. பள்ளியில் லேப் டாப் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்த மர்மநபர்கள், லேப் டாப்களை திருடி சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பாண்டூரில் டி.இ.எல்.சி.கேபிஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பள்ளி என்பதால், இங்கு படித்து வரும் 191 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பாக இலவச லேப்-டாப் வழங்குவதற்காக கடந்த 15ம் தேதி மொத்தம் 191 லேப்-டாப்கள் கொண்டு வரப்பட்டது.
இவற்றை பள்ளியின் தரை தளத்தில் உள்ள தாளாளர் அறையில் பத்திரமாக வைத்து பூட்டப்பட்டது. கடந்த 19ம் தேதி மாலை அறையை வழக்கம் போல பூட்டிவிட்டு, பள்ளி நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். லேப் டாப் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி, பள்ளி தாளாளர் நட்சத்திர ராஜ், தலைமை ஆசிரியர்(பொறுப்பு) அர்த்தநாதான், அலுவலக உதவியாளர் மனோகர் என்ற மார்டின் ஆகிய 3 பேரிடமும் இருந்தது.
இந்த நிலையில் சனி, ஞாயிறு வார விடுமுறை முடிந்து, நேற்று வழக்கம் போல பள்ளி செயல்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் பள்ளிக்கு வந்த தாளாளர் நட்சத்திர ராஜ், தனது அறைக்கு சென்றார். அப்போது லேப்-டாப் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த லேப்-டாக்கள் இங்கும், அங்குமாக சிதறி கிடந்தன. இதையடுத்து லேப் டாப்களை சரிப்பார்த்த போது, இதில் 20 லேப்-டாப்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
மேலும் பள்ளியின் 2வது தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் திருடப்பட்ட லேப்-டாப்களின் அட்டை பெட்டிகள் சிதறி கிடந்தன. வார விடுமுறையின் போது, பள்ளியின் தாளாளர் அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், 20 லேப்-டாப்களை எடுத்து கொண்டு, மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளின் வழியாக தப்பி சென்றது தெரிவந்தது.
இது குறித்து பள்ளி தாளாளர் நட்சத்திர ராஜ், திருவள்ளூர் தாலுக்கா போலீசாரிடம் புகார் அளித்தார். திருட்டு போன லேப் டாக்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.