தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பால் கொள்முதல் அளவு மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சுமார் 7 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.
இதற்கு வசதியாக பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் சீராக வைத்துள்ளது. இதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வினியோகம் செய்து வந்த விவசாயிகள், தற்போது அரசு கூட்டுறவு நிலையங்களுக்கு பால் அளித்து வருகின்றனர்.
இதனால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனைக்கு வினியோகிக்கப்பட்டு வந்த அளவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் ஆவின் கடைகளில் நிலவி வந்த பால் தட்டுப்பாடு நீங்கி, தற்போது தாராளமான கிடைக்கிறது. மேலும் பால் பொருட்களான நெய், வெண்ணெய் ஆகியவை பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சியின் மூலம் தீபாவளி பண்டிகைக்கு தேவையான நெய், வெண்ணை மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் ஆவின் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆவின் பால் விற்பனை அளவும் அதிகரித்துள்ளது. வழக்கமாக தினமும் 10.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை நடைபெற்ற வந்த சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது தினமும் 11 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. மேலும் நெய் விற்பனை அளவு இரட்டிப்பாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாதந்தோறும் 50 முதல் 60 டன் வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது மாதந்தோறும் 100 டன் முதல் 110 வரை நெய் விற்னையாகி வருகிறது. இதனால் ரூ.250க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பால் பவுடர் தற்போது ரூ.140 ஆக குறைந்துள்ளது.
இதேபோல மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் பொருட்களின் அளவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவில் இந்த ஆண்டு ரூ.250 கோடி மதிப்பிலான பால் பவுடர் விற்பனையாகி உள்ளது. அதாவது மொத்தம் 1,200 டன் பால் பவுடர் விற்பனையாகி உள்ளது. இதில் முன்னணியில் வகிக்கும் நிறுவனங்களில் ஆவின் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.