சென்னை: கேள்வித்தாள் அவுட் ஆனதால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதிய 6.40 லட்சம் பேரும் மீண்டும் தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழகத்தில், காலியாகவுள்ள நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு, ஆகஸ்ட் 12ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை 6.40 லட்சம் எழுதினர்.
ஆனால் இந்தத் தேர்வுக்கான கேள்வித்தாள் லீக் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்வுக்கான தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி நவம்பர் 4ம் தேதி புதிய தேர்வு நடத்தப்படும் என்றும், ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் மீண்டும் இந்தத் தேர்வை எழுதுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும். புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது.
ஆகஸ்ட் 12ம் தேதி நடந்த தேர்விற்கு இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.