
வீட்டு உபயோகத்திற்காக அளிக்கப்பட்டு கேஸ் சிலிண்டர்களை மோசடி முறையில் பெறுவது, அதிக விலைக்கு வெளி சந்தையில் விற்பது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் வீட்டு உபயோகத்திற்கு அளிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கான பதிவை முறைப்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதற்காக நுகர்வோர் தங்களின் பெயர், முகவரி மற்றும் மற்ற விபரங்களை, கேஸ் ஏஜென்ஸிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு இன்று வரை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நுகர்வோர் தரப்பில் பலரும் விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை. இதனால் இதற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி நாளாக அடுத்த மாதம் 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டிற்கு ஒரு கேஸ் இணைப்பு என்ற திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கூடுதல் கேஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களாகவே, அதை திரும்ப சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒரே வீட்டு முகவரியில் உள்ளவர்களின் பெயர்களில் பல கேஸ் இணைப்புகள் இருந்தால், அந்த இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே முகவரியில் வசிக்கும் பல குடும்பங்கள் இருக்கும் நிலையில், அதற்காக சான்றுகளை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
கேஸ் ஏஜென்ஸிகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் இணைப்பு பெற்றவரின் பெயர் முகவரி, குடும்ப நபர்களின் பெயர்கள், பிறந்த தேதி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பெயர்கள், பின்கோடு ஆகிய விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும். மேலும் இணைப்பு பெற்றவரின் புகைப்படம், அடையாள அட்டை, வங்கி கணக்கு விபரம் ஆகியவையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
குடும்ப நபர்களின் இறப்பை அடுத்து கேஸ் இணைப்பை மாற்ற வேண்டியிருந்தால், இறந்தவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் அவரது தலைமுறையினரின் தகவல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள கேஸ் நுகர்வோருக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி புதிய திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications