நெல்லை: கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் பரவியதன் எதிரொலியாக தமிழகத்திலிருந்து கோழி முட்டை, கறிக்கோழிகள் கேரளாவுக்கு கொண்டு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 லட்சம் கோழிகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், பணகுடி, வள்ளியூர் உள்பட பல பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகளில் ஒப்பந்த முறையில் சுகுணா பவுல்டரி பார்ம், வெங்கடேஸ்வரா ஹேட்ச்சரிஸ், சாந்தி பீட்ஸ் உள்பட பல நிறுவனங்கள் கோழிகளை வளர்த்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள், தீவணங்கள் வழங்குவதுடன் பண்ணையாளர்களுக்கு கோழிகளின் எடைக்கேற்ப பராமரிப்பு செலவையும் கொடுக்கின்றன. 35 முதல் 40 நாள் வரை வளர்ச்சி அடைந்தவுடன் நிறுவனத்தினர் கோழிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு நிறுவனமும் வாரத்திற்கு 30,000 முதல் 2 லட்சம் வரை கோழிகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புகின்றன. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வான்கோழி பண்ணையில் பறவை காய்ச்சலால் சுமார் 4,500 வான்கோழிகள் இறந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து கோழிமுட்டை, கறிக்கோழிகள் கேரளாவுக்கு கொண்டு செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தேங்கி உள்ளன. மேலும் கோழிவளர்ப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications