சென்னை: சென்னையில் செட் ஆப் பாக்ஸ் திட்டத்தை அமல்படுத்த வரும் 9-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய பெரு நகரங்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. ஆனால் சென்னை மாநகர கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ஜான்சன் டி.கென்னடி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகரைப் பொறுத்தவரை சுமார் 30 லட்சம் செட் ஆப் பாக்ஸ்கள் தேவைப்படுகின்றன. அந்த அளவுக்கு செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்யக்கூடிய அளவுக்கு எம்.எஸ்.ஓ.க்களுக்கு திறன் இல்லை. மேலும், சென்னை மாநகரில் அண்மையில்தான் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. 10 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த டெண்டர் பணிகள் முடிவடைந்து, செட் ஆப் பாக்ஸ் முறையை அமல்படுத்த குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். இதனால் கால அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், மத்திய அரசின் அவகாசத்தை நவம்பர் 5 ந் தேதி வரை நீட்டித்து, கடந்த 31 ந் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கால அவகாசத்தை 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் சென்னையில் உள்ள 7 எம்.எஸ்.ஓ. நிறுவனங்களையும், இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும். அதுவரை கால அவகாசத்தை நீட்டிப்பதாகவும் நீதிபதி கூறினார்.