
தமிழகத்தில் 5 ஆண்டுகளாக இயங்கி வந்த 27 மணல் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அவற்றை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்த குவாரிகள் மூடப்பட்டன. இத்தனை குவாரிகள் மூடப்பட்டதால் தமிழகத்தில் மணல் விலை தாறுமாறாக ஏறியது.
தற்போது சென்னையில் ஒரு லாரி மணல் ரூ.35,000 முதல் 42,000 வரை விற்கப்படுகிறது. இது தவிர போதுமான மணலின்றி கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையி்ல் 49 மணல் குவாரிகள் நடத்த அனுமதி கோரி தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடம் மனு கொடுத்தது.
இந்த ஆணையத்தின் கீழ் இயங்கும் குழு அரசின் மனுவை பரிசீலித்து ஆணையத்திடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 10 புதிய மணல் குவாரிகள் துவங்க ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. திருச்சி, கரூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய மணல் குவாரிகள் துவங்கப்பட உள்ளன. அவை இன்னும் 2 வாரத்தில் செயல்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தவிர இன்னும் 12 குவாரிகளுக்கான அனுமதி இன்று அல்லது நாளை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு,
குவாரி எல்லைகளைக் குறிக்கும் வகையில் 50 மீ இடைவெளியில் தூண்கள் அமைக்க வேண்டும். அந்த தூண்கள் மீது சிவுப்பு நிற கொடியை பறக்கவிட வேண்டும். குவாரிக்கான அனுமதி விவரம், மணல் அள்ளும் நேரம், பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, புகார்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு விளம்பரப் பலகைகள் செய்து அவற்றை 3 இடங்களில் வைக்க வேண்டும்.
இது தவிர குவாரிகளில் விதிமீறல் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க தாசில்தார் தலைமையில் கண்காணி்ப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய குவாரிகள் செயல்படத் துவங்கியவுடன் மணல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications