கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் ஆந்திராவின் சித்தூரிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது என்று கூறப்படுகின்றது. பறவைக் காய்ச்சலுக்கு சித்தூரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக எல்லையில் உள்ள சித்தூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அது தமிழகத்திற்கும் பரவும் அபாயம் உள்ளது. கர்நாடகத்தில் இருந்து கோழிகளை ஏற்றிவரும் வாகனங்கள் சித்தூர் வழியாக தமிழகத்திற்கு வருகின்றன.
இதையடுத்து தமிழக எல்லையான காட்பாடி சேர்க்காடு சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் என 3 பேர் கொண்ட குழு கடந்த 10 நாட்களாக முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றது. கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் வந்தால் அதிலும் குறி்ப்பாக கோழி, முட்டை, கோழித்தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் வந்தால் அவற்றை பரிசோதித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இது தவிர ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் கோழிகள், முட்டைகளுக்கு மருத்துவர்களின் சான்று இருந்தால் மட்டுமே அந்த வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் கர்நாடக வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழையலாம் என்பதால் கிருஷ்ணகிரியில் உள்ள சோதனைச்சாவடியில் வைத்து கோழிகள், முட்டைகள் உள்ள வாகனங்கள் சோதிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை நேரத்தில் பறவைக் காய்ச்சல் பீதி பரவி வருவதால் கோழி பண்ணையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.