மேலூர்: பல்லாயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையில் சிக்கியிருக்கும் பிஆர்பி தொழிற்சாலை இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பணிக்கு வந்தனர் தொழிலாளர்கள். ஆனால் அறிவித்தபடி தொழிற்சாலை திறக்கப்படாமல் சீலிடப்பட்ட நிலையில் இருந்ததால் பரிதவிப்புடன் வீட்டுக்கு திரும்பினர்.
கொள்ளை வழக்கு
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கீழவளவு பகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக பிஆர்பி அதிபர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பிஆர்பி நிறுவன குவாரிகள் மற்றும் கிரானைட் மெருகேற்றும் நிறுவனத்துக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து இழுத்து மூடியது.
நீதிமன்ற உத்தரவு
மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நிதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த டிவிசன் பெஞ்ச் சீலை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி ஆணைக்கு தடை விதித்தது. மேலும் டிசம்பர் 5ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நிர்வாக அறிவிப்பு
இந்நிலையில் தீபாவளிக்கு முன்பே கிரானைட் தொழிற்சாலை திறக்கப்படும் என்று பிஆர்பி நிறுவனம் அறிவித்தது. பின்னர் தீபாவளிக்கு பிறகு திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். இதனால் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்திருந்தனர். ஆனால் சீல் அகற்றப்படாமல் மூடப்பட்டிருந்த தொழிற்சாலையைப் பார்த்து பரிதவிப்புடன் வீடுகளுக்குத் திரும்பினர்.