நாமக்கல்: தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் என மொத்தம் ஒன்பது பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.
அதன்படி 2012-2015ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் என அறிவி்க்கப்பட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 53 லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தேர்தலில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் துவங்கியது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 16ம் தேதி நடந்தது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த தேர்தலை நடத்தக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது.
தடை உத்தரவு காரணமாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.