சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் 4 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பு புதிதாக தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் வே.கனகசபை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேச்சு வளர்ச்சிக்கு காது கேட்பது மிகவும் அவசியம். முதல் 3 வயதிற்குள் குழந்தை பேசக் கற்று கொண்டுணரும். காது கேளாமை குழந்தையின் பேச்சு வளர்ச்சி மட்டுமின்றி கல்வி, குடும்பத்தில் மன உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உலக சுகாதார நிறுவனம் 2005ம் ஆண்டு எடுத்த கணக்கின்படி உலக அளவில் காது கேளாதோர் எண்ணிக்கை 2,780 லட்சமாகும். இந்தியாவில் மட்டும் 63 லட்சம் பேர் காது கேளாத குறைபாடு உள்ளவர்கள். ஆனால் காது மற்றும் பேச்சு குறைபாடுகளை கண்டறியும் நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை அளிக்க பி.ஏ.எஸ்.எல்.பி பட்டப்படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இது தான் முதன் முதலாக மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரி ஆகும். இது 4 வருட பட்டப்படிப்பாகும்.
இந்த படிப்பிற்கான அனுமதியை இந்திய மறு வாழ்வு கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த படிப்பை ஆய்வு செய்ய அக்டோபர் 6ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கவுன்சில் வந்தது. இந்த படிப்புக்கு தேவையான கூடுதல் புத்தகங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்கள் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு 25 மாணவர்கள் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. பேச்சு பிரிவிற்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளது என்றார்.