டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல் தோல்வியடைந்துள்ளது. இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்தும் முடங்கும் நிலைமை உருவாகி உள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடங்கிப் போயுள்ளது. இதனால் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருந்தது.
மத்திய அமைச்சர் கமல்நாத் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் தேவை என்று பாஜக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை வலியுறுத்தின.
எந்த விதியின் கீழும் விவாதம் நடத்த ஒத்துழைப்பதாக முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சியும் விவாதம் நடத்தலாம்.. ஆனால் விவாதம் நடத்துவது பற்றி அவைத்தலைவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றார். அரசுத் தரப்பிலோ வாக்கெடுப்பில்லாத விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டது. இதனால் இன்றைய கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இன்றைய கூட்டம் தோல்வி அடைந்திருப்பதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கும் நிலையே உருவாகி இருக்கிறது.