வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலமாக பல எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி வந்தன. தேவையற்ற எஸ்.எம்.எஸ்.களை பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாள் ஒன்றுக்கும் 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை டிராய் அமைப்பு கொண்டு வந்தது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த உச்சவரம்பை 200 எஸ்.எம்.எஸ். என உயர்த்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே தொலைத்தொடர்பு சர்ச்சை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், எஸ்.எம்.எஸ். உச்சவரம்புக்கான டிராய்யின் சுற்றறிக்கையை கடந்த ஜூலை 17ம் தேதி ரத்து செய்தது. இதனால், எஸ்.எம்.எஸ்.சுக்கான உச்சவரம்பு நீக்கப்பட்டது.
இதற்கிடையே, தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ‘டிராய்' அப்பீல் செய்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச், டிராய்-ன் சுற்றறிக்கையை ரத்து செய்ததோடு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இதுகுறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஆதித்யா தாக்கரேவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே இனி டிராய் அனுமதித்துள்ள உச்சவரம்பின் படி, ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளில், 200 மெசேஜ்கள் அனுப்ப முடியும்.