புதுடெல்லி: நாடு முழுவதும் செல்போன்களுக்கான ரோமிங் கட்டணத்தை மார்ச் முதல் நீக்க வேண்டும் என்று தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
செல்போன்களை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே பயன்படுத்தும்போது, அதற்கு கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. ஆனால், ஒரு மாநிலத்தை விட்டு மற்றொரு மாநிலத்துக்கு பேசும்போது, ரோமிங் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், வெளிமாநிலங்களில் இருக்கும்போது, சொந்த மாநிலத்தில் உள்ள எண்களுக்கு பேசும்போது, ரோமிங் அழைப்பு என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை முழுமையாக நீக்க கடந்த மே மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், எப்போது இருந்து இதை அமல்படுத்துவது என்று கால நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஆனால், ரோமிங் கட்டணத்தை நீக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை நீக்குவதால் தங்களுடைய வருவாய் பாதிக்கும் என்று அவை கூறியுள்ளன. இந்தநிலையில், வரும் மார்ச் 1 முதல் ரோமிங் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ரோமிங் கட்டணத்தை நீக் கும்போது செய்யப்பட வேண்டிய தொழில்நுட்ப வசதி களை செய்து கொள்வதற்காகவே இந்த 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரோமிங் கட்டணத்தை நீக்கும்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரே லைசென்ஸ் வழங்க வேண்டிய சூழ்நிலையும் அமைச்சகத்துக்கு உள்ளது. தற்போதுள்ள கால அவகாசம் இதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது ரோமிங் கட்டணமாக போனுக்கு வரும் அழைப்புகளுக்கு 1ரூபாயும் வெளியே செல்லும் அழைப்புகளுக்கு ரூ.1.50ம், எஸ்.எம்.எஸ்.களுக்கு ரூ.1.50ம் சராசரியாக வசூலிக்கப்படுகின்றன. ரோமிங் கட்டணம் நீக்கப்படும் பட்சத்தில் நாடுமுழுவதும் இனி ஒரே கட்டணம் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications