டெல்லி: அதிகரித்து வரும் ஊழல்களால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது ன்று தொழிலதிபர் ரத்தன் டாடா கருத்து தெரிவித்திருக்கிறார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு டாடா அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:
அதிகரித்து வரும் ஊழல்கள், நீதிமன்ற நடைமுறைகள், வரிவிதிப்பு சட்டங்கள் ஆகியவற்றால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. இது சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் மத்திய அரசு மீதான நம்பகத்தன்மையை குறைத்திருக்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெற்று, முறையான உரிமம் பெற்று இந்தியாவில் தொழில் தொடங்குகின்றன. ஆனால் 3 ஆண்டுகள் கழிந்த பிறகு, உங்கள் உரிமம் சட்டவிரோதமானது, நீங்கள் தொழில் செய்ய முடியாது என அரசு கூறுகிறது.
மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கக் கூடாது. சட்டங்கள் புனிதத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். சட்டங்கள் என்றால் அவை நீடித்து நிற்க வேண்டும். மாறாக அவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டால், குறைகளை நிவர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது உள்பட மத்திய அரசின் சமீபத்திய செயல்பாடுகள் மூதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்றார் டாடா.
21 ஆண்டுகளாக டாடா குழுமத் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா, வரும் 28-ந் தேதி அந்நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற இருக்கிறார்.