டெல்லி: 2015ம் ஆண்டுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட, உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதார மந்த நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகரான கவுஷிக் பாசு கூறியுள்ளார்.
இந்திய பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகராக இருந்த கவுசிக் பாசு நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும், இந்த சிக்கல்களிலிருந்து மீள பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஆனாலும் இந்த சிக்கல்களில் இருந்து மீள இன்னும் சரிசெய்யப்பட வேண்டியவை நிறைய உள்ளது என கவுசிக் பாசு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இடைக்கால மற்றும் நீண்டகால நோக்கில், அதன் வளர்ச்சி பிரகாசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் பாசு. கடந்த சில மாதங்களாக அதற்கான நல்ல அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரேசில் இந்த மந்தநிலையில் இருந்து சற்றே மீண்டுள்ளது. ஆனால் சீனாவின் வளர்ச்சி வேகம் முன்புபோல் இனி இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார் பாசு.


Click it and Unblock the Notifications