
இந்தியா- ரஷியா இடையேயான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருக்கும் ரஷியா அதிபர் புதின் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறுவதாக இந்தப் பேச்சுவார்த்தை மாணவர்கள் போராட்டம் காரணமாக மன்மோகன்சிங்கின் இல்லத்துக்கு மாற்றப்பட்டது.
பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மன்மோகன்சிங்குடன் புதின் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா- ரஷியா இடையே 10 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 2 பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் அடங்கும்.
சு-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் 42 ஐ வாங்குவதற்காக ரூ16,600 கோடி மதிப்பில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதேபோல் ரூ8,555 கோடி மதிப்பில் 59 எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது.
மேலும் மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமும், ரஷிய நிறுவனமான ரோசோபோரோன்எக்ஸ்போர்ட்டும் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி இந்துஸ்தான் ஏரோநேட்டிக்சுக்கு இத்தகைய போர் விமானங்களை இணைத்து உருவாக்குவதற்கான தொழில்நுட்ப சாதனங்களை ரஷியா வழங்கும். இப்படி உருவாக்கப்படும் போர் விமானங்கள், இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 4 ஆண்டுகளில் இந்திய விமானப்படையிடம் உள்ள சு-30 எம்கேஐ ரக போர் விமானங்களின் எண்ணிக்கை 272 ஆக உயரும்.
ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துக்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளிடையே முதலீட்டை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள முதலீட்டு கூட்டமைப்பு உருவாக்குவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.


Click it and Unblock the Notifications