சென்னை: தமிழ்நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன்கார்டுகளை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கும் வகையில் உள்தாள் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் தற்போது உடற்கூறு (பயோமெட்ரிக்) முறையிலான தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு செய்துள்ள கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் ஒரு முன்னோடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு (ஸ்மார்ட் கார்டு) ரேஷன் கார்டுகள் வழங்கவும், இது போல பிற மாவட்டங்களிலும் உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்புப் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்தப்பணி முழுமையாக முடிந்து தகவல் தொகுப்பினை பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து தற்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், அவற்றிற்கு உள்தாளினை அச்சடித்து ஒட்டவும், உள்தாளில் ஒருபக்கம் 2013-ம் ஆண்டிற்கான (12 மாதங்கள் அடங்கிய) கலங்களுடனும், மறுபக்கத்தில் 2014-ம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையிலும் உள்தாளை அச்சடிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
முகவரி மாற்றம் உள்ளிட்ட இதர மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவுகள் மேற்கொள்ளவும் இணைப்பில் உள்ளவாறு ஒரு கோடி படிவங்களை அரசு அச்சகத்தில் அச்சடித்து, ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கவும், அவற்றின் அடிப்படையில் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பில் தேவையான பதிவு மாற்றங்களை செய்து கொடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications