சென்னை: சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 8 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 39-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் வளர்மதி, சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா, சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தாமதமாக தொடக்கம்
புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஆண்டு தோறும் அரசு பொருட்காட்சி டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கி 72 நாட்கள் நடக்கும். ஆனால் தற்போது அரசு பொருட்காட்சியை தொடங்க உரிய காலத்தில் தொடங்க உத்தரவிட்டும் சுமார் 8 நாட்கள் காலதாமதமாக பொருட்காட்சி தொடங்கியுள்ளது.
பொருட்காட்சி இந்த ஆண்டு 8 நாட்கள் தொடங்குவதற்கு காலதாமதமாகி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்களை தவறவிட்டுவிட்டதால் அரங்குகள் அமைத்துள்ள வர்த்தக நிறுவனத்தினர் வருத்தமடைந்துள்ளனர்.
46 அரங்குகள்
46 அரங்குகளுடன் 70 நாட்கள் நடக்க உள்ள பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணி தற்போது முழுமை பெறவில்லை என்பதால் வரும் சனிக்கிழமை வரை பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு பிறகு பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலும், மற்ற நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோவில்களின் பிரசாதங்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications