வள்ளியூர்: கூடங்குளம் அணு உலைக்கு தரமற்ற பொருட்களை வினியோகித்த ரஷ்ய நிறுவன அதிபரை ரஷ்ய அரசு கைது செய்துள்ளது. அவர் வினியோகம் செய்த தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட அணு உலை பாதுகாப்பானதா என்று மத்திய அரசுக்கு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்புயிள்ளார்.
கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என மத்திய அரசு அடிக்கடி கூறி வருகிறது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. கடந்த வாரம் ஹைட்ரோ சோதனை 2வது முறையாக நடத்தப்படுகிறது என அறிவித்தனர். அப்படியென்றால் முதல் சோதனை வெற்றி பெற்றதா, தோல்வியில் முடிந்ததா என்று இதுவரை கூறவில்லை. வெற்றியென்றால் திரும்ப சோதனை செய்யத் தேவையில்லை.
2வது முறையாக ஹைட்ரோ சோதனை ஓரிரு நாளில் தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் சோதனை முடிவை அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அனுப்புவார்கள். பின்னர் அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையத்தினர் ஆய்வு செய்து அணு உலையை இயக்கலாமா என்று அறிவிப்பார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த சோதனை முடிய இந்த மாதம் கடைசி வரை ஆகும். ஆனால் ஓரிரு நாளில் அணு உலையில் உற்பத்தி தொடங்கிவிடும் என்று கூறி வருவது நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசு போடும் நாடகம் ஆகும்.
கூடங்குளம் அணு உலைக்கு தேவையான உபகரணங்கள் ரஷ்யாவை சேர்ந்த சியோகோஸ்ல் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. தரமற்ற உபகரணங்களை செய்து கொடுத்ததற்காக அந்த நிறுவனத்தின் அதிபரை தற்போது ரஷ்யா கைது செய்துள்ளது. அவர் வினியோகம் செய்த தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட அணு உலை பாதுகாப்பானதா? எனவே அணு உலை தரம் பற்றி தகவல் உரிமை சட்டத்தில் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை பதில் அளிக்கவில்லை. அணு உலையால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பொறுப்பு என்றார்.