
அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் கடந்த 2008-ஆம் ஆண்டில், உலக அளவில் பொருளாதார உருக்குலைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர், அமெரிக்க அரசு வழங்கிய சலுகைகளால் அந்நாடு பொருளாதார பின்னடைவிலிருந்து படிப்படியாக முன்னேறத் தொடங்கியது. அதேசமயம், நிதி பற்றாக்குறை உயர்ந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் விதத்தில் செலவினங்களைக் குறைத்தது.
இதன் காரணமாக, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் சரிவடைந்தது.
இதன் தொடர் நடவடிக்கையாக மேலும் 8,500 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்க அரசு தனது செலவினங்களை குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக பன்னாட்டு பண நிதியம் (ஐஎம்எப்) முன்னறிவிப்பு செய்துள்ளது.
மேலும், அந்நாட்டில் சுமார் 7.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும் எனவும் அது அச்சம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி தடைபடுமோ, என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பெரும்பாலான பொருள்கள் ஆடம்பர வகையை சார்ந்தவையே. இது, முற்றிலும் அங்குள்ள நுகர்வோரது நிதிக்கேற்ப வாங்கும் திறனைச் சார்ந்த விஷயமாகும். வாங்கும் திறன் குறைந்துள்ள நிலையில் இப்போது இந்தப் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த நிலையால் எந்த அளவு இந்திய ஏற்றுமதி குறையும் என்று கணிப்பது கஷ்டம் என்றும் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications