இது குறித்து தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் து.விவேகானந்தன் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி, தமிழகம் முழுவதும் கேபிள் டிவி சேவையினை மாதம் ரூ.70 என்ற கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் என அறிவித்தார்கள்.
அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி சேவையை அளித்து வருகிறது. சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட சந்தா தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றன.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேபிள் டிவி சேவைக்கான மாதச் சந்தாத்தொகை ரூ.70/-ஐ 01.03.2013 முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையிலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும் செலுத்த கூடுதல் வசதிகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், கேபிள் டி.வி. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு, 05.03.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் கேபிள் டி.வி. மாதச் சந்தாத்தொகை ரூ.70/-ஐ அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையில் www.arasucable.com என்ற இணையதளத்தின் வழியாக செலுத்தலாம்.
இதுதவிர, தற்போதுள்ள நடைமுறைப்படி கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலமாகவும் செலுத்தலாம். இதன் மூலம் பொது மக்கள் மாதக்கட்டணமான ரூ.70/-ஐ மட்டும் செலுத்தி கேபிள் டிவி சேவையினைப் பெற்று பயனடையலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வசூலிக்கப்படும் கேபிள் டி.வி. மாதாச் சந்தாத்தொகை ரூ.70/-ல் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களின் பங்கான ரூ.50/- அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.