
நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி வசூல் இலக்கை எட்டுவதற்காகவும், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுத்து வருகிறது.
நடப்பு 2012-13 நிதியாண்டில் ரூ.5.05 லட்சம் கோடி நேரடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ரூ.4.17 லட்சம் கோடி மட்டுமே வரி வசூலாகியுள்ளது. இதனால் நிதியாண்டு முடிய ஒரே ஒரு மாதம் உள்ள நிலையில் இலக்கை எட்ட மேலும், ரூ.88,000 கோடி வரி வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இலக்கினை எட்டுவதற்காக, வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வரும் மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு, மத்திய உற்பத்தி வரி புலனாய்வு இயக்குநரகம், மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகிய அமைப்புகள் வரி வசூலிக்க தீவிரமாக்கப்பட்டு உள்ளன.
வரும் 31-ந்தேதிக்குள் வரி வசூல் இலக்கை எட்டுவதற்காக சேவை வரி, சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை இந்த அமைப்புகள் விரைவுபடுத்தி வருகின்றன.
இந்த மாதம் 27, 29-ந்தேதி ஹோலி மற்றும் புனித வெள்ளி என்ற பண்டிகைகள் வருகின்றன. இவை அரசு விடுமுறை தினம் என்பதால், அதை சமன் செய்யும் விதமாக, இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்களான வரும் 30, 31-ந்தேதிகளில் (சனி, மற்றும் ஞாயிறு தினங்களில்) வருமான வரி இயங்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதைபோல் பொதுமக்கள் எளிதில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு வசதியாக கூடுதல் கவுண்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications