சென்னை: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து சுதந்திர விசாரணை கோரியும் தமிழகத்தில் நடந்து வரும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈழத் தமிழகர்களுக்கு ஆதரவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 3500 கடைகள், பழ மார்க்கெட்டில் 1500 கடைகள், பூ மார்க்கெட்டில் 1000 கடைகள் என அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் மார்க்கெட் பகுதி இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது.
இந்நிலையில் வெளியூர்களில் இருந்து காய்கறி, பழம், பூ ஏற்றி வரும் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை வியாபாரிகள் அனைவரும் பழ மார்க்கெட்டில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ராஜபக்சேவை கண்டித்து கோஷமிட்டனர்.