முதலமைச்சர் ஜெயலலிதா இன்று, நந்தனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வெளிச்சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையாக, 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம், காவேரியில் தண்ணீர் திறந்து விடாததாலும், தமிழகத்தில் நெல் மகசூல் குறைந்துள்ளது. அதன் காரணமாக வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.
அமுதத்தில் அரிசி:
அரிசி விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் என்ற விலையில் வெளிச்சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 2.4.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
தொடங்கி வைத்தார்:
அரிசியின் வெளிசந்தை விலை உயர்வை நிலைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக நுகர்வோருக்கு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தினை இன்று சென்னை, நந்தனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் நலன் கருதி திட்டம்:
இந்த விலை குறைந்த மற்றும் தரம் நிறைந்த அரிசி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நடத்தப்படும் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் புதிதாக திறக்கப்படவுள்ள சிறப்பு கடைகள், கூட்டுறவுச் சங்கங்களின் மொத்த விற்பனை பண்டக சாலைகளால் நடத்தப்படும் சில்லறை அங்காடிகளில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனை செய்யப்படும்.
குறைந்த விலை அரிசி:
முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, வெளிச்சந்தையில் அரிசியின் விலையை நிலைப்படுத்த வழி வகுப்பதோடு, குறைந்த விலையில் அரிசி பெறுவதற்கும் வழிவகுத்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து அரிசியை பெற்றுக் கொண்ட பயனாளிகள், 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற குறைந்த விலையில் வழங்கிட்ட முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் எம்.பி. நிர்மலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்