"1999க்கு பின் அமலாக்கப் பிரிவு ஒருவரை அந்நிய செலாவணி முறைகேடு விவகாரத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது இதுவே முதல் முறை. நாடு முழுவதும் இது போன்ற வரி ஏய்ப்பாளர்கள் மீது இனி நடவடிக்கைகள் பாயும்" என அந்நிய செலாவணி வழக்குகளைக் கையாளும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
1999ல் இயற்றப்பட்ட பெமா (FEMA) சட்டம் அமலாக்கப் பிரிவு மூலம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் (The prevention of money laundering act) போலவே இதுவும் குடிமைச் (சிவில்) சட்டமாகவே பயன்படுத்தப்படுகிறது. குஜராத்தின் சூரத் நகரில் வியாபாரி மீது அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்த இந்த வழக்கில் அந்த வைர வியாபாரி 60,000 அமெரிக்க டாலர்களை சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டில் இருந்து பரிமாற்றம் செய்தது பெமா (FEMA) சட்ட மீறலாக கருதப்படுகிறது.
பலமுறை பெனால்டி அறிக்கை அனுப்பியும் வரி செலுத்தும் பொருளாதார வசதி இருந்தும் அந்த வியாபாரி சரியான பதில் அளிக்காததால் அமலாக்கப் பிரிவால் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அரிதாக உபயோகிக்கப்படும் இந்தப் பிரிவு 14ஐ இனி சரியாகப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் அந்நிய செலாவணி வழக்குகளை குறைக்கலாம் என்று அமலாக்கப் பிரிவு முடிவெடுத்திருக்கிறது. "பிரிவு 13ன் கீழ் விதிக்கப்படும் பெனால்டியை 90 நாட்களுக்குள் ஒருவர் கட்டத் தவறினால் அவரை சிறையில் அடைக்கலாம்" என பெமா (FEMA) சட்டத்தின் பிரிவு 14 சொல்கிறது.
அமலாக்கப் பிரிவின் உயர் அதிகாரிகளும் நாடெங்கிலும் உள்ள தங்கள் அலுவலகங்களை இது போன்ற அந்நிய செலாவணி விதி மீறல் செய்தவர்களை பட்டியல் எடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
"இருப்பினும் இந்தப் பிரிவின் கீழ் ஒருவரை அதிகபட்சம் ஆறு மாதம் வரை மட்டுமே சிவில் சிறைக்கு அனுப்ப முடியும். ஒரு சிவில் கைதி கிரிமினல் கைதி அளவுக்கு கடுமையாக நடத்தப்படுவதில்லை. குற்றம் செய்தவர் பெனால்டி பணத்தை செலுத்தினால் தண்டனைக் காலம் முடியும் முன்னதாகவே சிறையில் இருந்து வெளியில் வரலாம்." இவ்வாறு ஒரு அதிகாரி தெரிவித்தார்.