எஸ் அன்ட் பி, ஃபிட்ச் அல்லது மூடி நிறுவனங்கள் இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கை குறைத்தால் என்ன?
உலகில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கை குறைத்தால் நமக்கு என்ன நஷ்டம் என்று தோன்றுவது இயல்பு. ஆனால் இதன் விளைவுகள் நம் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டது. ஆம் நம் ஊரில் எப்படி சிபில் ஒரு தனி நபரின் வருமானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிட்டு வங்கிகளுக்கு விவரங்களைத் தருகிறதோ, அதே போலத் தான் ரேட்டிங் நிறுவனங்கள் உலக நாடுகளின் கிரெடிட் ரேட்டிங்கை கணக்கிட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
கிரெடிட் ரேட்டிங்கை குறைப்பது என்பது இந்திய நிறுவனங்களில், இந்தியாவில் முதலீடு செய்வது ரிஸ்க் ஆன விஷயம் என முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கும் விதமாக கருதப்படும். ரிஸ்க் ஆன தொழிலுக்கு கடன் பெறப் போனால் வட்டி மிகவும் அதிகமாக இருக்கும். கடன் வாங்குவதும் கடினம். அது போலத் தான் ரிஸ்க் அதிகமாக இருக்கும் நாட்டிற்கு கடன் கொடுக்க, அதிக வட்டியை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பர். ஆகையால், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அதிக வட்டி கொடுத்து கடன் பெற வேண்டி இருக்கும்.
அதுமட்டுமல்ல, தம் முதலீடுகளுக்கு ரிஸ்க் ஏற்படுத்தும் நாடுகளில் முதலீடே செய்ய மாட்டோம் என்று பல உலக முதலீட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் ஏற்கனவே முதலீடு செய்தவர்களும் தாங்கள் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வர்.
இவ்வாறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் ரூபாயை விற்று அவற்றை டாலராக எடுத்துச் செல்வதால் நாணயச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியும். மேலும், இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து பலரை நஷ்டப்படுத்தும். ஏற்கனவே பிபிபி ரேட்டிங்கில் இருக்கும் இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கை மேலும் குறைத்தால் இவை எல்லாம் நடக்கலாம். தற்போது இது தொடர்பாக எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது, குறைக்கப்படவில்லை.
அப்படி என்ன தான் எஸ் அன்ட் பி சொல்கிறது?
கடந்த வெள்ளிக்கிழமை எஸ் அன்ட் பி நிறுவனம், இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கை குறைக்கப்போவதாக எச்சரித்தது. அதற்கான காரணங்களாக அந்நிறுவனம் சொன்னது இதைத் தான்.
"இந்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக நடைப்பெற்று வருகிறது. இதே வேகத்தில் சென்றால் முந்தைய ஆண்டுகளில் அடைந்த பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெற முடியாது. நல்ல மக்கள் வளம் மற்றும் அதிகமான அந்நியச் செலாவணி இருப்பு போன்றவை இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கிற்கு ஆதரவாக இருந்தாலும், மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறை, கடன் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரைச் சார்ந்த பொருளாதாரம் போன்றவை இந்தியாவின் ரேட்டிங்கிறகு பாதகமான சூழ்நிலையில் உள்ளது. இதனால் இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்கை குறைக்க வேண்டி இருக்கும்." இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.