இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"70,000 கடிதங்களும் இரண்டு தொகுப்புக்களாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. அதில் முதல் தொகுப்பாக 35,000 கடிதங்கள் கடந்த நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. எங்களிடம் உள்ள கணக்குகளின்படி கிட்டத்தட்ட 12.19 லட்சம் பேர் இன்னும் வருமான வரியே தாக்கல் செய்யவில்லை.
இதில், அதிக வருமானம் கொண்ட முக்கிய புள்ளிகளை அடையாளம் கண்டு அவர்களை வரி செலுத்த வைக்கவும், கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வருமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தடுக்க, கடந்த ஆண்டிலிருந்து இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா என்று கேட்டு 1.05 லட்சம் பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் அந்த நபர் செய்த பண பரிவர்த்தனைகளின் தொகுப்பு மற்றும் அதற்கான பதில் அனுப்பும் படிவம் போன்றவை அடங்கியிருக்கும். இந்த நடவடிக்கைகளின் விளைவாக பலர் சுயமதிப்பீட்டு வரி(செல்ஃப் அசஸ்மெண்ட் டேக்ஸ்) மற்றும் முன்கூட்டியே வரி செலுத்தி, அதற்கான வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 600 கோடி ரூபாய்க்கும் மேலாக வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான உண்மையான வருமானத்தைத் தெரிவித்து, சரியான வரியை செலுத்துமாறு மீண்டும் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 6.68 லட்சம் கோடி ரூபாயை, நேரடி வரி வாயிலாக வசூல் செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் 5.65 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது.
வரி தானே...பார்த்துக்கலாம் என்று எண்ணி வரி ஏய்ப்பு செய்வது, நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு போன்றது. ஆகையால், கொஞ்சம் விழிப்போடு இருந்து சரியான வரியை, குறித்த நேரத்தில் செலுத்தி நிம்மதியாக இருப்போம்.