இந்தியாவில் கார்களை அதிக அளவில் விற்பனை செய்து வரும் மாருதி சுசூகி நிறுவனம் கடந்த சனிக்கிழமை அன்று எர்டிக்கா என்ற ஒரு புதிய காரை களமிறக்கி இருக்கிறது.
இந்த காரின் விசேஷம் என்னவென்றால் இந்த கார் சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) அதாவது இயற்கை எரிவாயுவினால் இயங்கும் திறன் கொண்டது. ஏழு இருக்கைகள் கொண்டிருக்கும் இந்த கார் ரூ.6.52 லட்சம் முதல் ரூ.7.30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
எர்டிக்கா க்ரீன் காரைப் பற்றி மாருதி சுசூகியின் விற்பனைப் பிரிவின் உதவி மேலாளர் மனோகர் பட் குறிப்பிடும் போது, வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், இயற்கை எரிவாயுவினால் இயங்கக்கூடிய எர்டிக்கா க்ரீன் என்ற புதிய காரை தாங்கள் களமிறக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
எர்டிக்கா க்ரீன் காரை வாங்குவதன் மூலமாக வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் நிறைந்த வசதிகளுடன் பயணம் செய்ய முடியும். அதோடு இந்த புதிய கார் மாருதி சுசூகி நிறுவனத்தின் சேவையை இந்தியா முழுவதிலும் மேலும் விரிவடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எர்டிக்கா காரில் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), பெட்ரோல், மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்தலாம். ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 22.80 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 2012 முதல் இதுவரை 87,000 எர்டிக்கா கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.
தற்போது சிஎன்ஜி எரிபொருள் மற்றும் ஐ-ஜிபிஐ (இன்டெலிஜன்ட்-கேஸ் போர்ட் இன்ஜெக்சன்) தொழில் நுட்பத்தில் வந்திருக்கும் புதிய எர்டிக்கா க்ரீன், கண்டிப்பாக எரிபொருளை சிக்கனமாக கையாளும் என்று சுசுகி தெரிவித்திருக்கிறது.
எர்டிக்கா க்ரீன் கார், சிஎன்ஜி பிரிவிலிருந்து வரும் 6வது கார் ஆகும். ஆல்ட்டோ, வேகன் ஆர், ஈக்கோ, எஸ்எக்ஸ்4 மற்றும் எஸ்டிலோ போன்றவை சிஎன்ஜி பிரிவிலிருந்து வரும் மற்ற 5 கார்கள் ஆகும்.
எர்டிக்கா க்ரீன் கார்கள் டெல்லி, குஜராத், மும்பை, பூனா, ஆந்திரபிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கின்றன என்று மாருதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.