"வங்கியின் அயல்நாட்டு விரிவாக்கத் திட்டங்களின் கீழ், நாங்கள் வங்கியின் கிளை அலுவலகங்களை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தொடங்க உள்ளோம். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தடைநீக்க உத்தரவைக் கோரியுள்ளோம். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறோம்." என்று கடந்த திங்களன்று வதோதராவில் பங்குதாரர்களிடையே உரையாற்றிய போது கோச்சார் கூறியுள்ளார். மேலும் "ஏற்கெனவே எங்களுக்கு ஒரு அலுவலகம் உள்ள சீனாவில் தற்போது முழு வீச்சில் இயங்கக்கூடிய ஒரு கிளையைத் துவக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தனியார் துறை வங்கிகளுள் ஐசிஐசிஐ வங்கியே ஏராளமான அயல்நாட்டு கிளைகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வங்கிக்கு மூன்று துணை நிறுவனங்களும், எட்டு சார்பாளர் அலுவலகங்களும் பல்வேறு நாடுகளில் அமையப்பெற்றுள்ளன.
ஐசிஐசிஐ வங்கி, வங்கிகளற்ற இந்திய கிராமப்புறங்களிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கோச்சார் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் நாங்கள் 350 புது கிளைகளைத் திறக்க உள்ளோம். இவற்றுள் சுமார் 200 கிளைகள் வங்கிகளற்ற பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. அடுத்த மூன்று வருடங்களில், கிளை கட்டமைப்பு விரிவாக்கப் பணிகள் இன்னும் விரைவான முறையில் செயல்படும்." என்று அறிவித்துள்ளார்.
பொருளாதார நிலை மற்றும் அதிகார வர்க்கத்தினால் உண்டாகக்கூடிய இன்னல்கள் பற்றிப் பேசுகையில், "எங்களது ஒட்டுமொத்த வணிகத் தொடர்போடு ஒப்பிடுகையில் அதிகார வர்க்கத்தினருடனான எங்களது தொடர்பு சுமார் 7% குறைவாகவே உள்ளது; இதிலும், பாதிக்கு மேல் ஏற்கெனவே நல்ல பணப்புழக்கத்தோடு, நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுடனான வணிகத் தொடர்புகளே." என்று கோச்சார் கூறியுள்ளார்.
"ரூபாயின் நிலையற்ற தன்மைக்கு இடையிலும், ஐசிஐசிஐ வங்கி, ஜப்பான் நிறுவனங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் சுமார் 510 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும். பண மதிப்பில் மிகுந்த தடுமாற்றம் நிலவிய காலத்திலேயே, நாங்கள் சீன சந்தைகளிலிருந்து சொல்லிக் கொள்ளும் படியான நிதிகளை ஈட்டியுள்ளோம். நியாயமான விலையில் லிக்விடிட்டி இருக்கக்கூடியதான வாய்ப்புக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம். அவ்வாறான வாய்ப்பு கிட்டும் போது நாங்கள் மேற்கொண்டு அந்த நிதிகளை அதிகரிக்க முனைவோம்." என்றும் அவர் கூறியுள்ளார்.
உலக நிதிப்பற்றாக்குறை நெருக்கடியின் போது, வங்கித்துறையில் உண்டான புயல்களை திறம்பட எதிர்கொண்டு சமாளித்த ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகத்தை வெகுவாகப் பாராட்டியுள்ள பங்குதாரர்கள், சந்தா கோச்சார் அவர்களை வங்கியின் துணை சேர்மனாக உயர்த்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஊழியரும் தன் ஒரு நாள் ஊதியத்தை உத்தர்காண்ட் -இன் வெள்ள சேதாரப் பகுதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு வழங்குவர் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. "நிவாரணத்துக்கு வழங்கப்படும் மொத்தத் தொகை, ரூபாய் 500 கோடிக்குக் குறையாதவாறு ஊழியர்களின் பங்களிப்பு போக எஞ்சிய தொகையை வங்கி செலுத்தும்." என்றும் சந்தா கோச்சார் அறிவித்துள்ளார்.