இந்தியாவில் மிகப் பரந்த அளவில், தொலைத் தொடர்பு சேவையை பாரதி ஏர்டெல் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2003 முதல் 2005 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில், 13 சேவை பகுதிகளில், ரோமிங் விதிமுறைகளை எக்குத்தப்பாக மீறியிருக்கிறது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த அபராதத்திற்கு இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஒப்புதல் அளித்து உறுதி செய்திருக்கிறார்.
இது சம்பந்தமாக தொலைத் தொடர்பு துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, எஸ்எல்டி (சப்ஸ்க்ரைபர் லோக்கல் டயலிங்) சம்பந்தமாக, ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்பதற்கு கபில் சிபல் ஒப்புதல் அளித்து, அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2003 - 2005 ஆண்டு வரை, தொலைத் தொடர்புத் துறை நிறுத்தச் சொன்ன பிறகும்கூட, ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளை லோக்கல் கால்களாக (எஸ்எல்டி) பயன்படுத்தி வந்திருக்கிறது. இதை தொலைத் தொடர்புத் துறையச் சேர்ந்த ஒரு சிறப்புக் குழு கண்டுபிடித்து, தொலைத் தொடர்புத் துறையிடம் தெரிவித்திருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ஏமாற்று செயலினால், அரசுக்கும், பாரத் சஞ்சர் நிகாம் லிமிடட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கும் அதிகமான அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அந்த குழு தெரிவித்திருக்கிறது. எனவே இந்த வார இறுதியில், ரூ.650 கோடி தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்பதற்கான முறையான நோட்டீஸ் ஒன்றை, ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இது சம்பந்தமாக ஏர்டெல் நிறுவனம் இன்னும் வாய் திறக்கவில்லை.