இந்தியாவில் தங்கச் சுரங்கங்கள் இல்லை. எனவே நாட்டு மக்களின் தேவைக்கான தங்கம் முழுவதையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டும் 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.
அதாவது அவ்வாறு தங்கத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான பணத்தை அமெரிக்க டாலர்களில் தான் செலுத்த வேண்டும். எனவே இந்தியா 38 மில்லியன் பணத்தை அமெரிக்க டாலர்களில் செலுத்தியது.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் தங்கத்தை இறக்குமதி செய்யும் போது, நமது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதாவது இந்திய ஏற்றுமதி மதிப்பு குறைந்து இறக்குமதி மதிப்பு அதிகரித்து விடுகிறது.
தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் போது, இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் சரிவு ஏற்படுகிறது. அதனால்தான் சமீபத்தில் அமெரிக்க டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதாவது தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ59.34 என்ற நிலையில் இருக்கிறது.
ஏற்றுமதியின் மூலம் போதுமான அமெரிக்க டாலர்களை இந்தியா பெறாத போது, தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதால், அதற்கான பணத்தை அமெரிக்க டாலர்களில் இந்தியாவால் செலுத்த முடியாது. எனவே அதிகமான பணத்தைச் செலுத்தி டாலர்களை வாங்கிச் செலுத்த வேண்டும். அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு பல மடங்கு குறைந்து விடுகிறது.
மேலும் இந்தியாவில் போதுமான எண்ணெய் வளங்கள் இல்லாததால், பெட்ரோல் போன்ற எரிபொருள்களையும் வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. எரிபொருள்களை இறக்குமதி செய்யும் போதும், அவற்றுக்கும் அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டும். எனவே ஏற்றுமதி மூலம் போதுமான அமெரிக்க டாலர்கள் இந்தியாவின் கைகளில் இல்லையென்றால், இந்திய ரூபாயைச் செலுத்தி அமெரிக்க டாலர்களை வாங்கி பின் செலுத்த வேண்டும். அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்து விடுகிறது.
எனவே அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்யும் போது, இந்தியாவின் எரிபொருள் தேவையை சமாளிப்பதில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. எனவேதான் தங்கத்தை வாங்க வேண்டாம் என்று நிதியமைச்சர் நாட்டு மக்களை அறிவுறுத்தி வருகிறார். அதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பை மீண்டும் உயர்த்த முடியும் என்று நம்புகிறார்.
தற்போது தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக தங்கத்தை இறக்குமதி செய்வதில் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்திருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் தங்கத்தை விற்பனை செய்வதை நிறித்தி இருக்கிறது. மேலும் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான சேவை வரியையும் இந்திய அரசு உயர்த்தி இருக்கிறது.
அதோடு புல்லியன் அசோஸியேசன் என்ற அமைப்பு தமது உறுப்பினர்களை தங்கக் கட்டிகளையும், தங்க நாணயங்களையும் விற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த முயற்சியில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம்.