புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதில் எத்தனை வங்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று எந்தவித இலக்கையும் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
புதிய வங்கிகளுக்கான உரிமம் வேண்டி இதுவரை 26 விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிறோம். புதிய வங்கிகளுக்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் நிறுவனங்கள் தங்கள் நிதி ஆதாரங்களையும் இணைக்க வேண்டும். எத்தனை புதிய வங்கிகளுக்கு உரிமம் கிடைக்கும் என்பது அந்த நிறுவனங்களின் வங்கித் திட்டம் மற்றும் அவர்களின் எதிர்கால செயல்பாட்டு வரைவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று ரிசர்வ் வங்கியின் தலைமை இயக்குனர் ஆர்.காந்தி தெரிவித்திருக்கிறார்.
எத்தனை புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படும். மேலும் எத்தனை புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று எந்தவித இலக்கையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருப்பவர்களின் வங்கித் திட்டம் மற்றும் அவர்களின் வங்கி நடவடிக்கைகளுக்கான வரைவு போன்றவற்றைப் பொறுத்தே அவர்களுக்கான உரிமம் வழங்கப்படும். எத்தனை நிறுவனங்கள் திருப்திகரமான வங்கித் திட்டங்களையும் மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கான வரைவையும் வழங்கும் என்று தெரியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை இந்தியா போஸ்ட், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ஆதித்தியா பிர்லா நுவோ மற்றும் எல்&டி ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் உட்பட 26 நிறுவனங்கள் புதிய வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கின்றன.
புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகளில், வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களின் நிதி ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனங்கள் தங்களின் 25 சதவீத வங்கிக் கிளைகளை கிராமப்புறங்களில் தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி கேட்டிருக்கும் நிதி ஆதாரத்திற்கான விதிமுறையை அடைவது என்பது சற்று சவாலான காரியம் என்று காந்தி தெரிவித்திருக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு, இந்தியாவில் உள்ள வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நாம் உறுதி எடுத்திருந்தோம். வறுமையை ஒழிப்பதே நமது பொருளாதார திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். எனினும் கடந்த 40 ஆண்டுகளாக, வறுமையை ஒழிக்கை சீரிய முறையில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை. ஆகவே புதிய வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் வங்கிகள், வறுமை ஒழிப்பிற்கான வங்கி நடவடிக்கைகள் அடங்கிய திட்டங்களை வகுத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று காந்தி தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஏழ்மையை ஒழிப்பதற்காக புதிய சிந்தனைகளும், புதிய நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சென்ட்ரல் மும்பை கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் பேச வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் புதுடில்லிக்குச் செல்ல வேணடியிருந்ததால், அவருக்குப் பதிலாக காந்தி கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்சொன்ன தகவல்களைத் தெரிவித்தார்.
சுப்பாராவ் இந்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தை சந்தித்து மாக்ரோ பொருளாதாரம் சம்பந்தமாக பேசுவார் என்று தெரிகிறது.