நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வசூல் இலக்கை அடைய முடியும் என்கிற நம்பிக்கை சிறுகச் சிறுக சிதைந்து வரும் இந்த தருணத்தில், நிதி அமைச்சர் ப சிதம்பரம் நிதித்துறை அதிகாரிகளை சந்தித்துள்ளார். அவருடைய சந்திப்பின் பொழுது, கலால் வரி செலுத்தும் முதல் 100 நபர்கள் மற்றும் சேவை வரி செலுத்தும் சுமார் 12 லட்சம் வாடிக்கையாளர்களில் வரி செலுத்துவதை நிறுத்திய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
"சேவை வரியைப் பொருத்த வரை,அந்த வரியை இது வரை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வரித் தாக்கலை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்த எண்ணிக்கை சுமார் 12 லட்சத்தை தாண்டி விட்டது. நாங்கள் அவர்களை இலக்காகக் கொண்டுள்ளோம்," என நிதி அமைச்சர் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் வருடாந்திர மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"வருவாயை திரட்டுவது என்பது நிதித் துறையின் மிக முக்கிய பணியாகும். மேலும் அந்தத் துறைக்கான மறைமுக வரி வசூல் இலக்காக ரூ 5.63 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது", என அமைச்சர் தெரிவித்தார்.
"எங்களால் வரி வருவாய் இலக்கை நிச்சயமாக அடைய முடியும். நாங்கள் எவ்வாறு சிபிடிடி (CBDT) இலக்கை அடைந்தோமோ அதே போன்று சிபிஇசி (CBEC) இலக்கையும் அடைவோம்," என திரு சிதம்பரம் கூறினார்.
மத்திய அரசு இந்த நிதி ஆண்டிற்கான மொத்த வரி வருவாயாக ரூ 12.35 லட்சம் கோடியை நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ 10.38 லட்சம் கோடியாக இருந்தது.
சுங்கவரியைப் பற்றி குறிப்பிடுகையில், நாட்டில் மொத்தம் 1.2 லட்சம் சுங்க வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.
"நாட்டில் உள்ள பிற வரிகளை செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சுங்க வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த வரியைச் செலுத்தும் முதல் 100 நபர்களிடம் நெருக்கமான தொடர்பை பேணிக் காத்து வரும் தலைமை ஆணையர்களை பாராட்டுகின்றேன். அவர்கள் வரி செலுத்தும் நபர்களை வாடிக்கையாளர்கள் போல் கருதுகின்றனர். அவர்களைப் பொருத்த வரை இந்தத் துறை (CBEC) சேவை வழங்கும் துறை போன்று செயல் படுகிறது ", என்று அவர் கூறினார்.
கலால் வரியைப் பொருத்த வரை முதல் 100 வாடிக்கையாளர்களே மொத்த கலால் வரியின் 80 சதவீதத்தை செலுத்துகின்றார்கள்.
நாட்டின் மொத்த நேரடி வரி வசூலின் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் சேவை வரியைப் பற்றி திரு சிதம்பரம் குறிப்பிடுகையில், மக்கள் இன்னும் இந்த மாதிரியான வரிவிதிப்பு யோசனைகளுக்கு பக்குவப்படவில்லை என்றார்.
"அவர்களுக்கு கலால் வரியைப் பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் சேவை வரி என்பது கலால் வரியின் மற்றொரு பக்கம் என்பது தெரியவில்லை. நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்தால் கலால் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் சேவை வழங்கினால் சேவை வரி செலுத்த வேண்டும். எது எப்படியோ நாம் ஏன் சேவை வரி செலுத்த வேண்டும் என்கிற மனப்போக்கு மக்களிடம் அதிகமாக உள்ளது, "என்று அவர் கூறினார்.
மேலும் அவர் "மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை உள்ளடக்கியது என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்", என்றார்.
சேவை வரி பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நேர தன்னார்வ இணக்க திட்டத்தை (தன்னார்வ இணக்க ஊக்கப்படுத்தும் திட்டம்) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க அரசு ஒரு பெரிய அளவிற்கு விளம்பரம் செய்ய உத்தேசித்துள்ளது எனத் தெரிவித்தார்.
அமைச்சர் தானே நேரிடையாக பெரிய நகரங்களில் உள்ள வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டங்களில் இதைப் பற்றி உரையாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
"வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே சந்தர்பமான இதைப் பயன்படுத்தி சேவை வரியை செலுத்த வேண்டிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிலுவை வரியை எந்த விதமான வட்டி மற்றும் அபராதம் இல்லாமல் தற்பொழுது செலுத்திக் கொள்ளலாம். இதன் பிறகு அவர்கள் தொடர்ந்து சேவை வரியை செலுத்தி வந்தால் போதுமானது. இது அவர்களுக்கு கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு ஆகும்," என்று அவர் கூறினார்.
வரி துறை விரைவில் இணக்கம் திட்டத்தை பற்றிய FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்வி) வெளியிட உள்ளது. ஏனெனில் இதுவரை இந்த திட்டத்திற்கான வரவேற்பு மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நிதி ஆண்டில், அரசு சேவை வரிகளின் மூலம் சுமார் ரூ 1.8 லட்சம் கோடி வருவாயை எதிர்பார்க்கிறது.
சுங்க, கலால் மற்றும் சேவை வரியை உள்ளடக்கிய மறைமுக வரி வசூலுக்கு 2013-14 நிதி ஆண்டில் ரூ 5.65 லட்சம் கோடிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட சுமார் 19 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதி ஆண்டிற்கான மறைமுக வரி வசூல் ரூ 4.73 லட்சம் கோடியாக இருந்தது.
CBEC-இல் உள்ள மனித வள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அந்த துறையில் உள்ள ஏராளமான காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.