"ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன்களின் அபரிமிதமான பட்டுவாடாவுடன் சம்பந்தப்பட்ட அபாயங்கள் மற்றும் நுகர்வோரின் தகுதி ஆகிய கண்ணோட்டத்துடன் நோக்குகையில், தனி நபர்களுக்கென ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுக் கடன்களின் பட்டுவாடா, வீட்டு வசதி செயல்திட்டம்/ தனி வீடுகளின் கட்டுமானம் எந்த நிலையில் உள்ளது என்பதை கூர்ந்து நோக்கி வழங்குதல் நலம் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று ஒரு ஆர்பிஐ அறிக்கை கூறுகிறது.
"முடிவடையாத/ கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும்/ பசுமையான நிலத்தில் செயல்படுத்தப்படும் வீட்டு வசதித்திட்டங்களுக்கு நேரிடையான பட்டுவாடா வழங்கப்படக் கூடாது." என்றும் அது தெரிவித்துள்ளது.
"புதுமையான வீட்டுக் கடன் திட்டங்கள்" என்ற பெயரில் சில வங்கிகள், கடன் தொகையை கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளுக்கிணங்க கொஞ்சம் கொஞ்சமாக பட்டுவாடா செய்வதை விடுத்து, டெவலப்பர்கள்/ பில்டர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான மொத்தத் தொகையையும் நேரடியாக பில்டர்களுக்கு வழங்கி விடும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இத்திட்டங்களின் கீழ், கடனுக்கு மனு செய்த தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக் கடன் மீதான வட்டி/ மாதத்தவணை கட்டுமான காலத்தின் போது பில்டரால் சர்வீஸ் செய்யப்படுகிறது. இந்த கடன் திட்டங்கள் 80:20 மற்றும் 75:25 திட்டங்கள் என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இத்தகைய வீட்டுக் கடன் திட்டங்கள், வங்கிகள் மற்றும் அவற்றிலிருந்து கடன் வாங்குவோரை அதிகப்படியான அபாயங்களுக்கு ஆளாக்கக்கூடியவை ஆகும்.
இந்த அபாயங்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் பில்டர்களுக்கு இடையிலான பிரச்சினைகள், கடன் வாங்கியவர் சார்பாக பில்டர் செலுத்தி வரும் வட்டி/ மாதத்தவணைத் தொகை தாமதாகவோ அல்லது செலுத்த தவறுதல் மற்றும் உரிய நேரத்தில் வீட்டு வசதித்திட்டம் முடிவடையாமல் இருத்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன.