சென்னை: வளர்ந்து வரும் வர்த்தக சந்தையின் நிலைமை அடுத்த 18 மாதங்களுக்கு தடுமாற்றத்துடனே இருக்கும் என்று ஹெச்.டி.எஃப்.சி சேர்மனாகிய திரு தீபக் பரேக் எச்சரித்துள்ளர். மேலும் அவர், மத்திய வங்கியின் நடவடிக்கைகள் வளர்ச்சியைத் தூண்ட தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மோதிலால் ஆஸ்வால் உலகளாவிய முதலீட்டாளர்களின் வருடாந்தரக் கூட்டத்தில் பங்கேற்ற திரு பரேக் அவர்கள், "வளர்ந்து வரும் சந்தைகள் அடுத்து வரும் 18 மாதங்களுக்கு தடுமாற்றத்துடனேயே இருக்கப் போகின்றன. லிக்விடிட்டி அட்ஜஸ்ட்மென்ட் வசதி, சிஆர்ஆர் மற்றும் மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதி போன்ற ஆர்பிஐயின் நடவடிக்கைகள், பொருளாதார மேம்பாட்டுக்கு போதுமானவையாக இல்லை" என்று பொருளாதாரத்தைப் பற்றிய தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், நாட்டை விட்டு அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறிக் கொண்டிருப்பதாலும், சர்வதேச அளவிலான நம்பகத்தன்மை குறைந்து வருவதாலுமே ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாய துறை
எனினும், நல்ல மழைப்பொழிவு கிடைக்கக்கூடிய சூழலில், விவசாய வளர்ச்சி இவ்வருடம் சுமார் 4 சதவீதத்தை எட்டும் என்ற உத்தேசம் உண்மையாகும் பட்சத்தில், ஜிடிபி வளர்ச்சி சுமார் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயரும் என்று உள்நாட்டு பொருளாதாரத்தைப் பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விவசாய துறையில் 5 - 6% வளர்ச்சி எட்டும்
"இந்த வருடம் விவசாயத் துறை சிறந்த முறையில் செயலாற்றி, உணவுத் தட்டுப்பாடை இலகுவாக்கும். மேலும் இவ்வருடத்திற்கு தேவைப்படக்கூடிய தாங்கிருப்பைக் காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகமான கோதுமையும், 3 மடங்கு அதிகமான அரிசியும் நம் வசம் உள்ளன. இந்தியா நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடு, எனவே கூடிய விரைவில் விவசாய துறையில் நாம் 5-6 சதவீதம் வரையிலான வளர்ச்சி விகிதத்தை எட்டுவோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள் உணவுப் பாதுகாப்புக்கு உகந்த வகையில் இன்னும் தயாராகவில்லை; மாநிலங்கள் பயனாளர்கள் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வங்கித் துறை
வங்கித் துறைக்கான கண்ணோட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பரேக், நீண்ட - காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இத்துறை பெரும் வளர்ச்சித் திறன் உடையதாய், நம்பிக்கையளிக்கும் வண்ணம் காட்சியளிக்கிறது. அடுத்த 10 வருடங்களில், வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வங்கி ஊடுருவல் மேம்படும்.
உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம்
உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தில் இருந்த சில முட்டுக்கட்டைகள் களையப்பட்டதாகவும், மாநில மின்சாரத்துறையின் மறுசீரமைப்பை தொடர்ந்து, அவர்களின் கணக்குப் பட்டியல் வரும் நாட்களில் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத் தேர்தல்
"மாநிலத் தேர்தல்கள், அடுத்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்ற முன்னோட்டத்தை நமக்கு அளிக்கும். தேர்தல்கள் முன் கூட்டியே நடக்க வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன்; மேலும் அடுத்ததாக நாட்டை ஆளப்போவது யார் என்பது பற்றிய பல்வேறு யூகங்களும் நிலவி வருகின்றன." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டீசல் விலையில் உயர்வு
எரிபொருள் உதவித்தொகை கூட்டமைப்பில், டீசல் உதவித்தொகையே உயர்ந்ததாகவும், டீசலின் அண்டர்-ரெக்கவரி சுமார் 5 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதனால் அரசாங்கத்துக்கு டீசல் விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் திரு பரேக் கூறியுள்ளார்.