மும்பை: அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுவதிலும் 10 இடங்களில் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். அவற்றில் செயல்படப்போகும் நிறுவனங்களின் மென்பொருள் தயாரிப்புகளுக்கு அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அமெரிக்காவில் ஒரு தனி அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"எஸ்டிபிஐ (STPI) திட்டத்தின் மூலம் இந்தியாவில் 10 தொழில்நுட்பப் பூங்காக்கள் அமையப் போவது உறுதி. இதன்படி மிக விரைவில் முதல் பூங்கா பஞ்சாப் மாநிலத்தில் செயல்பட உள்ளது. இந்த தொழில்நுட்பப் பூங்காக்கள் கிராமப் பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது. உதாரணமாக, வட கிழக்கில் தேஸ்பூர் மற்றும் தர்பங்கா (பீகார்) பகுதிகளில் அமைக்கப்படும்" என்று சிஐஐ நிகழ்ச்சி ஒன்றில் கபில் சிபல் தெரிவித்தார்.
இந்த மையங்களில் உடனடியாகத் தொழில் தொடங்கி செயல்பட விரும்பும் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்பும், பிற வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை 2013 நிதியாண்டில் 76 பில்லியன் டாலர் ஏற்றுமதி உட்பட 108 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஆனாலும் தங்கள் தயாரிப்புகள் நுகர்வோரைச் சென்றடைய, பெரிய நிறுவனகளின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவுகளை வைத்துள்ளது போல சிறிய நிறுவனங்களால் செய்ய முடியவில்லை. இந்தக் குறையைப் போக்கி சிறு நிறுவனக்களுக்கு உதவும் விதமாக அரசே தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் அமெரிக்காவில் விற்பனை மற்றும் சந்தைக்கு என்று தனி அலுவலகம் ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது என்றும் கபில் சிபல் கூறினார்.