மும்பை: ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை, ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில், உரிமை செயல்பாடு விதிமுறை மீறல் உள்ளதால் தொலைத்தொடர்பு துறை ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு சுமார் ரூ 600 கோடி அபராதம் விதித்துள்ளது.
நேற்று காலையில் ஐடியா செல்லுலார் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இது குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தது.
மேலும் இந்த அறிக்கையில் அடுத்த 15 நாட்களுக்குள் ரூ.600 கோடி அபராதம் செலுத்திவிட்டால் ஸ்பைஸ் நிறுவனத்தின் பஞ்சாப் மற்றும் கர்நாடகப் பகுதிகளின் செயல்பாட்டு உரிமைகளை எந்த ஒரு தடையும் இன்றி பெற்று கொள்ளலாம் என்று தொலைத்தொடர்பு துறை அனுப்பிய கடித்தில் குறிப்பிட்டு இருந்ததாக ஐடியா செல்லுலார் நிறுவனம் கூறியுள்ளது.
தொலைதொடர்புத் துறையின் நடவடிக்கைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை ஐடியா செல்லுலார் நிறுவனம் எடுக்க உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
10% பங்குகள் மட்டும் தான்
தொலைத்தொடர்புத் துறை விதிகளின் படி, ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குனர், ஒரே பகுதியில் செயல்படும் மற்றொரு நிறுவனத்தில் 10 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பங்குகளை வைத்திருக்க முடியாது.
ஐடியா வைத்திருந்ததோ 41.09% பங்குகள்
ஐடியா செல்லுலார் நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 41.09 சதவீத பங்குகளை வாங்கியது. 2010 ஆம் ஆண்டில் இவ்விரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டதால், ஆறு வட்டாரங்களில் உரிம விதிமுறை மீறல் ஏற்பட்டது.
6 மாநில உரிமம்
இரு நிறுவனங்களும் இணைந்த நேரத்தில், ஆந்திர பிரதேசம், தில்லி, அரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய ஆறு பகுதிகளுக்குமான உரிமம் இரண்டு நிறுவனங்களிடமும் இருந்தது .
2012இல் உரிமம் ரத்து
இதற்கிடையில் பஞ்சாப் மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கான ஐடியா செல்லுலாரின் உரிமத்தை உச்ச நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. ஸ்பைஸ் நிறுவனம் ஆந்திர பிரதேசம், தில்லி, அரியானா , மகாராஷ்டிரா பகுதிகளின் உரிமங்களை இழந்தது.
பஞ்சாப் மற்றும் கர்நாடகா
இதன் விளைவாக, இணைப்பிற்கு பின்னர் பஞ்சாப் மற்றும் கர்நாடகா பகுதிகளில் மட்டும் அந்நிறுவனம் செயல்பட்டு வந்தது.