டெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) தொடர்பாக வாரத்திற்கு 50 புகார்கள் வரை அபராதம் விதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுவரை இருந்த தொல்லை தரும் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி தொடர்பான புகாருக்கும் ரூபாய் 5000 அபராதம் என்ற விதியை தளர்த்தி இப்புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனங்களுக்கு ஏதுவாக பின்வரும் வகைப்படுத்தப்பட்ட பண மதிப்பிலான அபராதங்களை செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அமல்படுத்த ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராயின் இந்த புதிய வரைமுறைகள் படி, ஒரு வாரத்தில் 50 புகார்கள் வரை எந்த அபராதமும் இருக்காது. 50 புகார்களுக்கு மேல் 300 புகார்களுக்குள் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு புகாருக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 301 முதல் 700 புகார்கள் வரை புகாருக்கு 2,000 ரூபாயும், அதற்கும் அதிகமாக பெறப்படும் புகார்களுக்கு 5,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
வார அடிப்படையில் புகார்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு 12,848 புகார்கள் என்ற நிலையிலிருந்து வாரத்திற்கு 4,046 புகார்கள் என்ற அளவிற்கு நவம்பர் மாதத்தில் குறைந்ததாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.