இலங்கை அரசுக்கு சுமார் 38.2 மில்லியன் டாலர் மதிப்பிலான 2,200 பேருந்துகளை இலங்கை போக்குவரத்து வாரியத்திற்காக வாங்க திட்டமிட்டுள்ளது. இதை இந்தியாவின் அசோக் லைலாண்ட்மற்றும் இலங்கையரசின் கூட்டு முயற்சியான லங்கா அசோக் லைலாண்ட் பிஎல்சி நிறுவனத்திடம் வாங்கவுள்ளது.
இதற்காக இலங்கை அரசு லங்கா அசோக் லைலாண்ட் நிறுவனத்திடம் கடன் விற்பனைக்கான பேரத்தில் ஈடுபட்டுள்ளது என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் குமார வேல்காம கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இலங்கையரசு போக்குவரத்து வாரியத்திற்கு ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் இலங்கை ரூபாய்களை 5 வருடங்களுக்கு வழங்கும். அதற்கு மேற்பட்ட தொகையை அவ்வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த ஒப்பந்தமானது பலகாலமாக புதிய வண்டிகள் மற்றும் பராமரிப்புகள் இன்றித் தவிக்கும் அரசின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் முயற்சியாகும். தற்போது அங்கு சாதாரண மனிதர்களும் விலை அதிகமான தனியார் போக்குவரத்தை நம்பியுள்ள நிலை உள்ளது.
லங்கா அசோக் லைலாண்ட் நிறுவனம் 1982இல் துவங்கப்பட்டு அந்நாட்டின் பல்வேறு கடினமான கால கட்டங்களில் துணையாக நின்றதுடன் அதற்கான அதிகாரபூர்வ அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் பேருந்துகளும் சரக்குந்துகளும் சுமார் 60 விழுக்காடு பங்கை பெற்றுள்ளன. இது கடந்த 29 வருடங்களுக்கு முந்தய அளவான 13 விழுக்காட்டை ஒப்பிடுகையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாகும்.